தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையில் (அந்நாளைய மாயவரம்) மேற்குப் பகுதியில் தற்போது ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதி கூறைநாடு என்பதாகும். திருமணத்தின் போது மணமகள் கட்டும் கூறைச் சேலை நெய்யும் ஊர் என்பதால் இப்பகுதிக்கு கூறைநாடு என்ற பெயர் வந்தது. ஆங்கிலத்தில் அக்காலத்தில் KORANAD என எழுதப்பட்டு அதுவே தமிழிலும் சொல்லப்பட்டு கொரநாடு என மாறிப் போனது. பழம் பெருமை வாய்ந்த இக்கூறைச் சேலை நெய்யும் தொழிலைச் செய்த மக்களான சாலிய சமுதாயத்தினர் இப்பகுதியில் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் இங்கு குடியமர்ந்தனர்.
 கூறைநாட்டுச் சாலியர்களின் பூர்விகம் காஞ்சிபுரமாகும். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர், இங்கு நெசவுத் தொழில் செய்து வந்த சாலிய சமுதாய மக்கள், அப்பகுதியினை ஆண்ட “சால்வா நாயக்” என்ற நவாப் மன்னன் சாலிய சமுதாயத்தில் இருந்து ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்து துன்புறுத்தியதால், அரச தண்டணைக்கு ஆளாக நேரிடும் என அஞ்சி இரவோடு இரவாக காஞ்சியை விட்டுப் கூட்டம் கூட்டமாகப் புறப்பட்டு தென்பகுதியை நோக்கிப் சென்றனர். தாங்கள் ஊர் எல்லையைத் தாண்டும் வரை நவாபிற்குத் தெரியாமல் தங்களைக் காத்திடுமாறு காஞ்சி வரதராஜப் பெருமாளை வேண்டினர். நவாபின் படை வீரர்கள் சோதனையிட வீடுகளுக்கு வந்தபோது, பெருமாளும் உள்ளிருந்து வியாபர நிமித்தம் வெளியூர் சென்றிருப்பதாக்க் குரல் கொடுத்துக் காப்பாற்றியதாகவும் ஒரு வரலாறு உண்டு. அதனை நினைவு கூர்ந்திடும் வகையில் இன்றளவும் தங்கள் வீட்டுத் திண்ணையில் கம்பம் நட்டு, கம்ப சேவை என்ற வகையில் பெருமாளை வழிபடும் வழக்கத்தினைப் பின்பற்றுகின்றனர்.
காஞ்சியில் இருந்து இவர்கள் புறப்பட்டபோது, அங்கு இவர்கள் வழிபட்ட பிள்ளையார் சிலையினையும் கையோடு தூக்கிக் கொண்டு வந்தனர். மாயவரம் வந்து தங்கிப் இளைப்பாறி புறப்பட்டபோது, பிள்ளையார் சிலையினைத் தூக்க முடியாத அளவிற்கு கனமாகிப் போனதாகவும், அப்போது “இந்த இடத்தில் உங்களுக்கு எந்த குறையும் வராது, இது குறைவில்லாத ஊர், இங்கேயே நிரந்தரமாக தங்குங்கள்” என அசரீரி வாக்கு ஒலித்தமையால், அதை தெய்வ வாக்காக ஏற்று இங்கேயே நிரந்தரமாகக் குடியேறினர். அப்போது அவ்வழியாக வந்த தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மகாராஜாவின் பல்லக்குப் பின்னால் மாமரத்து மேடை என்ற இடத்தில் இருந்து கல்லறைத் தோப்பு ( இன்றைய செயின்ட் பால்ஸ் பெண்கள் மேனிலைப் பள்ளி) வரை தொடர்ந்து சென்றதாகவும், விபரம் கேட்டு அறிந்த மகாராஜா “தன்னைக் கண்டது முதல் விட்டது வரை” அனைத்து பகுதிகளும் சாலியர்களுக்கே சொந்தம்” என அறிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனாலேயே இவர்களின் வீடுகள் அனைத்தும் இதற்கு உட்பட்ட பகுதியிலேயே அமைந்து உள்ளன. இவர்கள் கட்டிய அய்யனார் கோவில் உற்சவ மூர்த்தி இன்றும் ஆண்டு உற்சவத்தின் துவக்க நாளன்று மட்டும் கல்லறை தோப்பு வரை சென்று வருவது இதற்கு சான்றாகும். படிப்பறிவு இல்லாததால் ஒவ்வொருவரும் கல்லை வீசியெறிந்து அது விழுந்த இடம் வரை உள்ள நிலத்தினைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டு, காஞ்சி விநாயகர் அமர்ந்த இடத்தினைச் சுற்றி காடுகளை அழித்து, தெருக்களை உருவாக்கினர். ஆங்காங்கே பள்ளம் தோண்டி மண்ணை எடுத்து, சேற்றால் பூசி வீடுகளைக் கட்டிக் கொண்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டனர். இன்றும் பல வீடுகள் அந்த கால மண் சுவருடன் இங்கு உள்ளதைக் காணலாம். இவ்வாறு மண்ணைத் தோண்டி எடுத்த பள்ளங்களைக் குளங்களாக ஆக்கிக் கொண்டனர். சந்தை வெளிக் குளம் (சந்திரிக் குளம்), ஓடக்குளம், வண்ணான் குட்டை, வள்ளிக் குட்டை, ஆராயக் குட்டை, பெரிய குளம் என்ற இவைகள் இன்றும் இவர்களுக்குச் சொந்தமான கோயில்களின் அனுபோகத்தில் உள்ளன.
காஞ்சி விநாயகர் இருக்கும் இடத்தினை மையமாகக் கொண்டு, தெருக்களையும் சாலியர் பெயராலேயே ஏற்படுத்திக் கொண்டனர். அவ்வகையில் காஞ்சி பிள்ளையார் உள்ள தெரு, பெரிய சாலியத்தெரு எனவும்,அதற்கு இரு பக்கமும் உள்ளதை வடக்கு சாலியத் தெரு, தெற்கு சாலியத் தெரு எனவும், மெயின் சாலையினைத் தாண்டியதை தனியூர் சாலியத் தெரு எனவும் பெயர் சூட்டினர். இன்றும் இப்பெயரே வழக்கில் உள்ளது. இவை தவிர அய்யனார் கோயில் தெரு, குமர கட்டளைத் தெரு, கீழஒத்த சரகு ஆகிய தெருக்களிலும் வீடுகளைக் கட்டி வாழ்ந்தனர். மேலும் சில குடும்பங்கள் கூறைநாட்டில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள குத்தாலம் என்ற சிற்றூருக்குச் சென்று அங்கும் சாலியத் தெருவினை ஏற்படுத்தி வாழ்ந்தனர். இன்றும் இங்கு வாழ்கின்றனர்.
இவர்களது வீடுகள் சூடாத மண் கற்கள் கொண்டு 11/4 அடி அகல சுவர்களைக் கொண்டுள்ள சேற்று மண் பூசி கட்டப் பட்டவையாகும். இவ்வீடுகள் இரண்டு கட்டு, மூன்று கட்டு என்ற அளவில் மிக மிகப் பெரியதாக தறி நெய்வதற்கு வசதியாக உள் திண்ணைகள் மற்றும் நூல், பாவு இழைப்பதற்கு வசதியாக பெரிய வெளித் திண்ணைகளும் கொண்டவை. இவ்வமைப்பு மாறாமல் ஓரிரு வீடுகளே இன்று உள்ளன. அண்ணன், தம்பி என அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாகவே இந்த வீடுகளில் வசித்தனர். பாகப்பிரிவனை செய்தாலும் இடத்தினை மற்றவர்களுக்கு விற்க முடியாத வகையில் நீள வாக்கிலும், குறுக்கு வாக்கிலும் பிரித்துக் கொண்டனர். விற்பதாயின் தங்களுக்குள்ளாகத் தான் விற்க முடியும். இதன் காரணமாக கூட்டுக் குடும்பமாக சண்டை சச்சரவு இன்றி வாழ்ந்தனர்.
கூறைநாட்டு சாலியர்கள் கைத்தறி மூலம் பட்டுச் சேலைகள் நெய்வதில் மிகத்திறமை வாய்ந்தவர்களாக இருந்தனர். மைசூர் ரக பட்டுச் சேலை என்பது இவர்களின் சிறப்பான தயாரிப்புகளில் ஒன்றாகும். மூவர் ஒன்றாக இருந்தால் மட்டுமே நெய்யக் கூடிய கோர்வை பார்டர் பட்டுச் சேலைகள், சன்னக் கொட்டடி, பெரியக் கொட்டடி, சிறுவாழைப்பூ, பாலும் பழமும் ஆகியவகளும் இவர்களால் அந்தக் காலத்தில் நெய்யப்பட்ட தனித்துவம் உடைய சேலைகளாகும். பெண்கள் திருமணத்தின் போது கட்டக் கூடிய பட்டு நூலும், சாதா நூலும் இணைத்து நெய்யப்படும் கூறைச் சேலையினை நெய்வதில் இவர்களுக்கு நிகர் ஒருவரும் இல்லை. இதனாலேயே இவர்கள் வாழ்ந்த பகுதி கூறைநாடு என்ற பெயர்ப் பெற்றது. ஆரம்ப காலத்தில் இவர்கள் நெய்த துணிகளை மாமரத்து மேடை என்ற இடத்தில் மூங்கில் கொம்புகளில் போட்டு வியாபாரம் செய்ததாகவும், உயர்சாதி அந்தணர்கள் கையால் தொடாமல் அந்த துணிகளை வாங்குவார்கள் எனவும் அறியப் படுகிறது. பிற்காலத்தில் அந்தணர்களையே தங்கள் வீட்டு காரியங்கள் செய்வதற்கு அமர்த்திக் கொள்ளும் அளவிற்கு வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்தனர். ஆண், பெண்பிள்ளைகளைப் படிக்க அனுப்பாமல் தறி நெசவில் ஈடுபடுத்தினர்.
கூறைநாட்டுச் சாலியர்கள் சைவ மதத்தினைப் பின்பற்றுபவர்களாக, அசைவ உணவு சாப்பிடாதவர்களாக இருந்துள்ளனர். பூநூல் போடும் வழக்கம் இவர்களுக்கு உண்டு. ஆரம்பத்தில் தங்களுக்கு எனத் தனியாக சாலிய குகுக்களை வைத்திருந்தனர். இவர்களுக்கு என குமர கட்டளைத் தெருவில் இடம் ஒதுக்கித் தந்துள்ளனர். இன்றும் இந்த இடம் குருக்கள் மனைத் தோட்டம் என்ற பெயரில் சாலிய சங்கப் பொறுப்பில் உள்ளது. பிற்காலத்தில் சேந்தங்குடியில் உள்ள பிராமணப் புரோகிதர்களை நியமித்துக் கொண்டனர். அரியபுத்திர வம்சாவளியினருக்குச் சொந்தமான காவிரிக் கரையில் உள்ள சாபாநாயகர் கோயில் நந்தவனத் தோட்டத்தில் இடம் கொடுத்து, பிராமணப் புரோகிதரை அமர்த்தி எல்லா காரியங்களையும் செய்து கொண்டு வருகின்றனர். இறந்தால் எரியூட்ட, புதைக்க என தனியாக மயானத்தை கொண்டு உள்ளதோடு, அந்தப் பணி செய்வோர்களுக்கு என அருகிலேயே நிலம் ஒதுக்கிக் கொடுத்து உள்ளனர்.
கூறைநாடு சாலியர்கள் மிகுந்த தெய்வ பக்தி உடையவர்களாக இருந்து உள்ளனர். பெரிய சாலியத் தெருவில் காஞ்சி விநாயகர் ஆலயம், வடக்கு சாலியத் தெருவில் செல்வ விநாயகர் ஆலயம், தெற்கு சாலியத் தெருவில் வெற்றி விநாயகர் ஆலயம், தனியூர் சாலியத் தெருவில் தாமோதர விநாயகர் ஆலயம், மற்றும் கீழ ஒத்த சரகில் சித்தி-புத்தி விநாயகர் ஆலயம் என ஒவ்வொரு தெருவிலும் ஆலயத்தினைக் கட்டியுள்ளனர். இது தவிர அய்யனார் கோயில். மகா மாரியம்மன் கோயில் புனுகீஸ்வரர் கோயில் ஆகியவற்றையும் கும்பாபிஷேகம் செய்வித்து வழிபட்டு வருகின்றனர். இக்கோயில்கள் அனைத்தும் சாலிய சமுதாயத்தினருக்குச் சொந்தமானதாக இவர்கள் மட்டுமே டிரஸ்டிகளாக இருந்து இன்றும் நிர்வகிக்கப் படுகின்றன. சிவன் கோயிலான புனுகீஸ்வரர் கோயில் திருவிழா சித்திரை மாதம் 18 நாட்களும், கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயில் திருவிழா ஆடி மாதம் 10 நாட்களும், அய்யனார்கோயில் திருவிழா தை மாதம் 10 நாட்களும் வெகுவிமரிசையாக இன்றும் நடைபெற்று வருகின்றது. இந்நாட்களில் உற்சவ மூர்த்திகள் அனைத்து சாலியத் தெருக்களுக்கும் வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கி வருவது சிறப்பான ஒன்றாகும். உற்சவத்திற்கான செலவுகளை ஒவ்வொரு தெருவாசிகளும் பகிர்ந்து கொள்கின்றனர். தவிர தனிப்பட்ட குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்கின்றனர். இவை தவிர சில குடும்பங்களில் அறக்கட்டளை முன்னோரால் ஏற்படுத்தப்பட்டு, அதன் வழியாக தான தர்மங்களையும் செய்து வருகின்றனர். அவ்வகையில் வைதீஸ்வரன் கோயில், சிதம்பரம் ஆகிய ஊர்களில் ஆலய வழிபாட்டிற்கும் தர்ம காரியம் செய்வதற்கும் சத்திரங்களைக் கட்டி இருந்தனர். வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்த சத்திரம் விற்பனை செய்யப்பட்டு, இன்று கூறைநாட்டில் புனுகீஸ்வரர் கோயில் சன்னதித் தெருவில் ஒரு சாலியர் மாளிகை கட்டப்பட்டு உள்ளது. சிதம்பரம் சத்திரம், சாலியர் காம்ப்ளஸ் என்ற பெயரில் கடைகள் கட்டப்பட்டு வருமானத்திற்கு வழி வழிவகை காணப் பட்டுள்ளது. புரட்டாசி மாத திருவோணத்தன்று திருப்பதிக்கு ஆஞ்சநேயர் விக்ரகம் எடுத்துச் செல்வது இன்றளவும் தொடர்கிறது. தங்கள் பிள்ளைகளுக்கு கடவுளர் பெயர்களைச் சூட்டி வந்துள்ளனர். கணபதி, வெங்கடாசலம், முத்தையன், ராமசாமி, நடராஜன் போன்ற பெயர்கள் அதிக அளவில் இருந்துள்ளன.
வேறெந்த சமுதாயத்திலும் இல்லாத வழக்கத்தினை கூறைநாட்டு சாலியர்கள் கொண்டிருந்தனர் என்பது வரலாற்று ஆசிரியர் டாண்டன் என்பவர் தனது நூலில் அந்த காலத்திலேயே குறிப்பிட்டு உள்ளார். ஒவ்வொரு குடும்ப வீட்டிற்கும் ஒரு பெயர் வழக்கில் இருந்துள்ளது. ஒழக்கம் வீடு, சிரந்தாம் வீடு, தடியன் வீடு, முருகன் வீடு, எட்டடையம் வீடு, கொள்ளி வீடு, காளையம் வீடு, காரணம் வீடு, கள்ளிக் கட்டாம் வீடு, ஓட்டி வீடு, மலையன் வீடு, தொந்தி வீடு, மந்தி வீடு, கொட்டாங்கச்சி வீடு என்பன குறிப்பிடத் தக்கவை. இதற்கான காரணம் சரியாகத் தெரிய வில்லை. ஒவ்வொரு குடும்பமும் ஒரு கோத்திரத்தினைக் கொண்டு இருந்து உள்ளது. ஒரே கோத்திரத்தில் இருந்து பெண் கொடுப்பதோ, பெண் எடுப்பதோ கிடையாது.
சமுதாயப் பெயர் சாலியர் என்றாலும், வியாபாரம் செய்ததன் காரணமாக தங்கள் பெயருடன் செட்டியார் என்பதைச் சேர்த்துக் கொண்டனர். காஞ்சியில் இருந்து பிரிந்து பிற ஊர்களில் வாழும் சாலியர்களுடன் எந்தவித தொடர்பும் இன்றி, தங்களுக்குள்ளாகவே கொண்டு கொடுத்து திருமணம் செய்வவர்களாகவே இன்றும் உள்ளனர். ஆரம்ப காலத்தில் வீட்டிலேயே இரண்டு நாட்கள் திருமண சடங்குகளைச் செய்தனர். அந்நாட்களில் அனைவரும் நெசவு வேலையினை நிறுத்தி விட்டு, திருமண வீட்டில் தான் இருப்பர். இக்காலத்தில் அதே சடங்குகளுடன் ஒரு நாள் திருமணமாக மண்டபத்தில் செய்கின்றனர். முதல் நாள் மாலை மாப்பிள்ளை,பெண் அழைப்புக்குப் பின் நிச்சயததார்த்தம் செய்து, தொடர்ந்து பரிசம் போடுவர். மறுநாள் காலை திருமணம் செய்கின்றனர். எந்த ஊரில் வாழ்ந்தாலும் திருமணத்தை கூறைநாட்டிற்கு வந்து தான் இன்றும் செய்கின்றனர். பெண்ணிற்கு இவ்வளவு நகை போட வேண்டும், வரதட்சணை என்றெல்லாம் பேசுவது கிடையாது. திருமணத்தில் மொய் எழுதும் வழக்கமும் கிடையாது. நெருங்கிய சொந்த பந்தங்கள் மட்டுமே ஏதாவது செய்வார்கள். தற்போது கூறைநாட்டில் சுமார் 250 குடும்பங்களும் சென்னையில் அதற்கு அடுத்த படியாக 180 குடும்பங்களும், பிற ஊர்களில் சில குடும்பங்களும் என 500-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இவர்கள் உள்ளனர். மிகக் குறைந்த எண்ணிக்கையில் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
கைத்தறி நெசவில் கைதேர்ந்தவர்களாக அக்காலத்தில் இருந்தாலும் படிப்பறிவே இல்லாதவர்களாக இருந்ததால், விசைத்தறி வந்தபோது, அதற்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ள முடியாமல் தறி நெசவுத் தொழிலை விட்டு விட்டனர், கல்வியின் முக்கியத்துவத்தினை உணராமலேயே, முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தினை வைத்துக் கொண்டு ஓரிரு தலைமுறையினர் வேலை செய்யாமல் வாழ்ந்தனர். பின்னர் கல்வியின் அவசியத்தினை உணர்ந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்தனர். கூறைநாட்டு சாலியர் சமுதாயத்தின் முதல் பட்டதாரி 1920-ல் தான் உருவானார். தொடர்ந்து அனைவரும் கல்வியில் கவனத்தினை முழு அளவில் செலுத்த ஆரம்பித்தனர். இன்று பட்டதாரி இல்லாத குடும்பமே இல்லை எனச் சொல்லலாம். ஆயினும் இவர்களில் அரசு உயர் பதவிகளான ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறை அதிகாரிகள் போன்றோர் இதுவரை உருவாகவில்லை. இன்று பாரம்பரிய தொழில் இவர்களுக்கு இல்லாமல் போனது எனினும், கற்ற கல்வியே வாழ்க்கை நடத்திட பெரிதும் உதவியாய் அமைந்துள்ளது என்பது வெளிப்படையான உண்மை.